
சென்னை: சென்னை, கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரில், ரூ.30.13 கோடியில் கட்டப்பட்ட வாகன சுரங்கப் பாலத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். வடசென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள போஜராஜன் நகர் 3 புறமும் ரயில்வே இருப்புப் பாதைகளால் சூழப்பட்டுள்ளதால், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ரயில்வே கடவுப் பாதை மூலமே வெளியே செல்ல முடியும். மேலும், அவசர காலங்களில் அவர்கள் வெளியே செல்வது மிகவும் சிரமமாக இருந்தது.
எனவே, இங்கு வசிக்கும் பொது மக்கள் உள்ளிட்ட வடசென்னைப் பகுதி மக்களின் நீண்ட நாள்கோரிக்கையான, போஜராஜன் நகரில் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு, சென்னை மாநகராட்சியின் நிதியின் கீழ் ரூ.30.13 கோடியில் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. இச்சுரங்கப் பாதையின் நீளம் 207 மீட்டர், அகலம் 6 மீட்டர் ஆகும். மேலும், மழைக்காலங்களில் மழை நீரை வெளியேற்ற ஒரு நீர் சேகரிக்கும் கிணறு, 85 எச்பி திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மற்றும் ஒரு ஜெனரேட்டர் நிறுவப்பட்டுள்ளது.