
தருமபுரி: தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி தமிழகத்தின் மொழி, இன உணர்வுகளை அணையாமல் பார்த்துக் கொள்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தருமபுரி அடுத்த தடங்கம் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற விழாவில், ரூ.363 கோடியில் முடிவுற்ற 1,073 திட்டங்களை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின், ரூ.513 கோடியில் 1,044 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும், 70,427 பயனாளிகளுக்கு ரூ.830 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை தருமபுரிக்கு தந்தது திமுக அரசு தான். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.447 கோடியில் 43.86 லட்சம் பயனாளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.