
சென்னை: தேர்தல் ஆணைய முறைகேடு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள், தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது இக்கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் நடந்ததாக ராகுல்காந்தி வெளியிட்ட தரவுகள் குறித்து தேசிய செயலாளர் பிரவீன் சக்ரவர்த்தி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தமிழில் விளக்கினார்.