
சென்னை: ஒடுக்கப்பட்டவர்களின் தலைநிமிர்வுக்காக தொடர்ந்து களத்தில் நிற்போம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். விசிக தலைவர் திருமாவளவனின் 63-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை காமராஜர் அரங்கத்தில் ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற கருப்பொருளுடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.
இதில் ஏற்புரை நிகழ்த்தி திருமாவளவன் பேசியதாவது: விசிக என்பது தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தி, தமிழகத்தின் எதிர்காலம் என்பதை, இந்த விழாவில் பங்கேற்ற ஒவ்வொருவரும் ஆற்றிய உரை உறுதிப்படுத்தி உள்ளது. நாம் மேலும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்ற உணர்வை இது தருகிறது. ஒடுக்கப்பட்டவர்களின் தலை நிமிர்வுக்காக நாம் களத்தில் நிற்கிறோம், தொடர்ந்து நிற்போம்.