
வரும் செப்டம்பர் 9ம் தேதி துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்தமாதம் உடல் நலனைக் காரணமாகக் கூறி பதவி விலகிய ஜகதீப் தன்கரின் இடத்தை நிரப்பவிருக்கிறார் ராதாகிருஷ்ணன்.
இதற்கு முன் வருகின்ற செவ்வாய் கிழமை பாஜக நாடாளுமன்ற குழுவை ராதாகிருஷ்ணன் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.
திருப்பூர் டு மகாராஷ்டிரா
சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் அக்டோபர் 20, 1957 அன்று தமிழ்நாட்டின் திருப்பூரில் பிறந்தவர். 2003 முதல் 2006 வரை தமிழக பாஜகவின் தலைவராக செயல்பட்டவர்.
இந்த காலத்தில்தான் பாஜக திமுகவின் கூட்டணியை இழந்தது. பின்னர் அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.

ஆர்.எஸ்.எஸ், ஜன சங்கம் இயங்களில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் சி.பி.ராதாகிருஷ்ணன். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு 1998, 1999 தேர்தல்களில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பிறகு தேர்தல்களில் தொடர்தோல்விகளைச் சந்தித்தார்.
ஆளுநராக…
பிப்ரவரி 18, 2023 முதல் ஜூலை 30, 2024 வரை ஜார்க்கண்ட் ஆளுநராகப் பணியாற்றினார். மார்ச் 2024 முதல் ஜூலை 2024 வரை தெலங்கானா ஆளுநராகவும், மார்ச் முதல் ஆகஸ்ட் 2024 வரை புதுச்சேரியின் லெப்டினன்ட் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்புகளை வகித்தார்.
பின்னர் ஜூலை 31, 2024-ல் மகாராஷ்டிரா ஆளுநராக பதவியேற்றார்.