
இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, “இந்த அக்டோபரில் விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ் அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும். கடந்த 100 ஆண்டுகளாக, ஆர்.எஸ்.எஸ் சுயம்சேவகர் (தன்னார்வலர்கள்) ‘மாதா பூமி’ (தாய்நாடு) நலனுக்காக ‘வியாக்தி நிர்மாணம்’ (நடத்தை மேம்பாடு) ‘ராஷ்டிர நிர்மாணம்’ (தேசக் கட்டுமானம்) ஆகியவற்றின் உறுதியை நிறைவேற்ற தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வருகின்றனர். இந்த ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு பயணம் மிகவும் பெருமைமிக்க, புகழ்மிக்க பயணம்” என்றார்.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தன. காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தேசிய பொதுச்செயலாளராக பதவி வகித்தவரும், 2017-ம் ஆண்டு இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவரும், முன்னாள் எம்.பி-யுமான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.கே ஹரிபிரசாத், “ஆர்.எஸ்.எஸ் நாட்டில் அமைதியைக் குலைக்க முயற்சிக்கிறது. நான் ஆர்.எஸ்.எஸ் தாலிபான்களுடன் மட்டுமே ஒப்பிடமுடியும். அவர்கள் இந்திய தாலிபான்கள், பிரதமர் செங்கோட்டையிலிருந்து ஆர்.எஸ்.எஸை பாராட்டுகிறார்.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற ‘சங்கிகள்’ யாராவது இருந்தார்களா? நாட்டில் பணியாற்ற விரும்பும் எந்தவொரு அரசு சாரா நிறுவனமும் அரசியலமைப்பின் படி பதிவு செய்ய வேண்டும். ஆனால், ஆர்.எஸ்.எஸ் இன்றளவும் ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு அல்ல என்பது வெட்கக்கேடானது. அவர்களுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது? பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்-ஸும் வரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள்.
அவர்கள் புதிய வரலாற்றை எழுத முயற்சிக்கிறார்கள். பிரிவினைக்கான முதல் தீர்மானத்தை வங்காளத்தில் முன்மொழிந்தவர்கள் ஃபஸ்லுல் ஹக் மட்டுமல்ல சியாமா பிரசாத் முகர்ஜியும்தான். ஜின்னாவும் சாவர்க்கரும் இரு மதங்களுக்கும் தனி நாடு தேவை என்று கருதினார்கள். அதற்காக அவர்கள் காங்கிரஸைக் குறை கூற முயற்சிக்கிறார்கள்.” எனக் காட்டமாக விமர்சித்தார்.