
மதுரை: தமிழக கட்டிடத் தொழிலாளர் மத்திய சங்கத்தின் சார்பில் பொன்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தொடக்கக் கல்வியில் தமிழ் கற்பிக்கப்படாது என்றும், 6-ம் வகுப்பிலிருந்து ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். வாரத்தில் 2, 3 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்திலேயே தமிழ் வகுப்புகளை நிறுத்திவிட வேண்டும் என்பது போன்ற விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.