
இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து பேசிய உரைகளில் நேற்று பேசிய உரைதான் (சுமார் 105 நிமிடங்கள்) நீளமானது. ஏற்கெனவே பா.ஜ.க-வுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் கருத்துவேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் கூட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் 75 வயதான தலைவர்கள் ஓய்வுபெற வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார். இந்த ஆண்டு செப்டம்பர் 17 அன்று மோடி 75-வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.
எனவே ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பேச்சு பிரதமர் மோடியை குறிவைத்து பேசபட்டதாக சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், சுதந்திர தின உரையில் வலதுசாரி அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ஸை பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார். அவரின் உரையில், “இந்த அக்டோபரில் விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ் அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும். கடந்த 100 ஆண்டுகளாக, ஆர்.எஸ்.எஸ் சுயம்சேவகர் (தன்னார்வலர்கள்) ‘மாதா பூமி’ (தாய்நாடு) நலனுக்காக ‘வியாக்தி நிர்மாணம்’ (நடத்தை மேம்பாடு) ‘ராஷ்டிர நிர்மாணம்’ (தேசக் கட்டுமானம்) ஆகியவற்றின் உறுதியை நிறைவேற்ற தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வருகின்றனர்.
இந்த ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு பயணம் மிகவும் பெருமைமிக்க, புகழ்மிக்க பயணம்” என்றார். பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “ஆர்.எஸ்.எஸ் பற்றி நாட்டு மக்களிடம் பேசுவது அரசியலமைப்பு, மதச்சார்பற்ற குடியரசின் உணர்வை அப்பட்டமாக மீறுவதாகும். அடுத்த மாதம் பிரதமரின் 75-வது பிறந்தநாள் வருகிறது. இந்த சூழலில் பிரதமரின் ஆர்.எஸ்.எஸ் குறித்த உரை அந்த அமைப்பை திருப்திப்படுத்துவதற்கான தீவிர முயற்சி. அவரின் இந்த உரை அந்த அமைப்புக்குள் இருக்கும் அதிகாரப் போராட்டத்தைக் குறிக்கிறது. பிரதமர் மோடியின் உரை பழைய, பாசாங்குத்தனமான, சலிப்பூட்டும் சுய பெருமை பேசுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையான சொற்கள்” என விவரித்தார்.

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, தன் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதைத் தடுக்கும் முயற்சியாக ஆர்.எஸ்.எஸ் பற்றிப் பேசியிருக்கிறார். அவரின் செயல் தியாகிகளின் நினைவையும் நமது சுதந்திர இயக்கத்தின் உணர்வையும் அவமதிக்கும் வகையிலானது. ஆர்.எஸ்.எஸ் காலனித்துவத்தை எதிர்த்து ஒருபோதும் நேரடிப் பங்காற்றவில்லை. ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற வெகுஜன போராட்டங்களில் இருந்து விலகி இருந்தது.
காங்கிரஸ் மற்றும் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவம் (INA) க்கு மாறாக RSS அச்சுறுத்தலாக கருதப்பட்டது. 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது கூட, RSS தலைவர் கோல்வால்கர் உறுப்பினர்களுக்கு அந்த இயக்கத்தில் பங்குகொள்வதை தவிர்க்க அறிவுறுத்தினார். RSS-ன் மரபு காலனித்துவத்தை எதிர்த்துப் போராடுவது அல்ல – மாறாக சக இந்தியர்களிடையே வெறுப்பு மற்றும் பிரிவினையைப் பரப்புவதாகும். இந்த வெறுப்பு சித்தாந்தம்தான் மகாத்மா காந்தியை நம்மிடமிருந்து பறித்தது.” என்றார்.

காங்கிரஸ் தலைவரும் தேசிய செய்தித் தொடர்பாளருமான சுப்ரியா ஷ்ரினேட், “இந்தியாவை மறுவடிவமைக்க வேண்டும் என்ற RSS ‘சித்தாந்த சதி’ குறித்து சோனியா வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையில், சர்தார் வல்லபாய் படேல் தானே RSS ஐ தடை செய்தார். இன்று சுதந்திர தினத்தன்று… பிரதமர் மோடி மட்டுமே இப்படிப் பேசுவார். RSS நாட்டில் வெறுப்பைப் பரப்புகிறது. சுதந்திரப் போராளிகள் பற்றிய பேச்சுக்கள் செங்கோட்டையில் இருந்து பேசப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.