• August 15, 2025
  • NewsEditor
  • 0

தமிழ்நாட்டு புறவழிச் சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவை எடுத்துள்ள தி.மு.க அரசை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

சுங்கச்சாவடி

அந்த அறிக்கையில்…

“தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆண்டுக்காண்டு சுங்கக் கட்டணம் உயர்த்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழகத்தில் உள்ள முக்கியமான புறவழிச் சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்க தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளதாக வந்துள்ள செய்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுங்கக் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்மீது பேசிய மாண்புமிகு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அவர்கள், 2008 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைக் கட்டணம் விதிகளின்படி, குறைந்தபட்சம் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்பதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் தான் நியாயமாக இருக்க வேண்டும் என்றும், இந்த விதியை மீறி பெரும்பாலான சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன என்றும், தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதை மத்திய அரசிடம் தெரிவிக்க இருப்பதாகவும்,

மத்திய அரசு
மத்திய அரசு

இதில் முதற்கட்டமாக, பத்து கிலோ மீட்டர் சுற்றெல்லையில் உள்ள நெமிலி, சென்னசமுத்திரம், வானகரம், பரனூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளை உடனடியாக மூடும் திட்டம் குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில், எந்தச் சுங்கச் சாவடியும் மூடப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், மாநில அரசின் வருவாயைப் பெருக்கும் வகையில், வண்டலூர் -மீஞ்சூர் வெளி வட்டச்சாலை பராமரிப்பு மற்றும் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பணியை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 2000 கோடி ரூபாய் அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும்,

இதனைத் தொடர்ந்து, நாமக்கல், இடைப்பாடி, கோவை கிழக்கு, கோவை மேற்கு, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருச்சி -கரூர், அருப்புக்கோட்டை, பெரியகுளம் – ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு புறவழிச் சாலைகளை தனியாரிடம் ஒப்படைத்து சுங்கக் கட்டணம் வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

இந்த முடிவு கடும் கண்டனத்திற்குரியது. இந்த முடிவின் மூலம் வாகன உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதோடு, வாகனக் கட்டணமும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பெருமளவு உயரக்கூடும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, புறவழிச் சாலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதை உடனடியாக ரத்து செய்யவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 32 சுங்கச் சாவடிகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”. என்று தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *