
கிஷ்த்வார்: ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திலிருந்து மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று மேகவெடிப்பின் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் சோசிட்டி மலை கிராமத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஆக உள்ளது. இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படுவதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளில் என்டிஆர்எப், எஸ்டிஆர்எப், காவல்துறை, ராணுவம் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளனர்.