
சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதிகளுக்கான தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 2 மண்டல தூய்மைப் பணியாளர்களில் என்யூஎல்எம் பிரிவைச் சேர்ந்தவர்கள் 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டம் மேற்கொண்டனர்.
இதற்கிடையே, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறிப்பதை ஒருபோதும்அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது.