
திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி 739 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யின் 32-வது பட்டமளிப்பு விழா வ.உ.சி. கலையரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழகம் மற்றும் அதன் 104 உறுப்புக் கல்லூரிகளில் படித்த 37,376 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இவர்களில் 739 பேருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார். துணைவேந்தர் ந.சந்திரசேகர் வரவேற்றார். இந்திய புவி காந்தவியல் நிறுவன இயக்குநர் அ.பி.டிம்ரி பட்டமளிப்பு விழா உரையாற்றினார். விழாவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், விழாவில் பங்கேற்கவில்லை. பல்கலை.யில் நடைபெற்ற கடந்த 3 பட்டமளிப்பு விழாக்களிலும் இணைவேந்தரான உயர்கல்வித் துறை அமைச்சர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.