
தமிழ், தெலுங்கு, இந்தி என அப்போதே இந்திய சினிமாவில் வலம் வந்தவர் நடிகை வைஜயந்திமாலா.
நடிப்பைத் தாண்டி நடனத்தின் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர் இவர்.
தன்னுடைய சினிமா கரியரின் உச்சத்தில் இருந்து பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கும்போதே நடிப்பிலிருந்து விலகிய அவர், அதன் பிறகு நடனத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகத்துக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவிலிருந்து விலகியதற்கான காரணத்தைத் தெரிவித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர், “கடவுள் அருளால் 92 வயதில் இன்னும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.
என் வாழ்க்கையையும் கரியரையும் திரும்பிப் பார்க்கும்போது, எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
நான் செய்தவற்றில் ஆழ்ந்த திருப்தி மட்டுமே உணர்கிறேன். நான் மிகவும் இளவயதில் நடிக்கத் தொடங்கினேன்.
35 வயதில், திருமணம் செய்துகொண்டு திரைப்படங்களிலிருந்து ஓய்வு பெறத் தயாராக இருந்தேன். ராஜேந்திர குமார்ஜியுடன் ‘கன்வார்’ தான் எனது கடைசிப் படம்.

ஆனால், என் ரசிகர்களும் தயாரிப்பாளர்களும் என் முடிவை ஏற்கத் தயாராக இல்லை. பல வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன.
ஆனால், நான் சமன்லால் பாலியைத் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன். கோல்ஃப் மீதான பரஸ்பர ஆர்வம் மூலம் நாங்கள் இருவரும் நெருக்கமானோம்.
என் கரியரின் ஒவ்வொரு தருணத்தையும் நான் அனுபவித்தேன். ஒருமுறை ஓய்வு பெற்ற பிறகு, நான் ஒருபோதும் திரும்பிப் பார்க்கவில்லை.” எனக் கூறியிருக்கிறார்.