• August 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் 13 நாள்களாகப் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று நள்ளிரவில் போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர்.

போராட்டக்காரர்கள் கைதான பின்னர், அங்கிருந்த குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்களை வைத்தே அகற்றப்பட்ட காட்சிகளும் அரங்கேறியது.

இந்தக் கைது நடவடிக்கையின்போது, சன் பிக்சர்ஸின் `கூலி’ திரைப்படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின், இன்று காலையில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார்.

தூய்மைப் பணியாளர்கள் கைதும், கூலி திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலினும்

இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்கள் கேட்ட பணி நிரந்தரக் கோரிக்கையைத் தவிர்த்துவிட்டு, வேறு 6 திட்டங்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியளர்களிடத்தில் அந்த திட்டங்களை விவரித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “தூய்மைப் பணியாளர்கள் நல வாழ்வில் முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பெரிதும் அக்கறை கொண்டிருக்கிறது.

தூய்மைப் பணியாளர்கள் மீது முதல்வர் தனி கரிசனத்தோடு இருக்கிறார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

6 புதிய திட்டங்கள்!

1) தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளைக் கையாளும்போது அவர்கள் நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

எனவே இத்தகைய தொழில்சார் நோய்களைக் கண்டறிவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

2) தற்போது தூய்மைப் பணியாளர்கள் பணியின் போது இறக்க நேரிட்டால் அவர்களுக்குத் தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் மூலமாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினரின் எதிர்கால நலன்களையும் வாழ்வாதாரத்தை முழுமையாக உறுதி செய்யக்கூடிய வகையில் இந்த நிதியுதவியுடன் கூடுதலாக இப்பணியாளர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் அளவிற்கு காப்பீடு இலவசமாக வழங்கப்படும்.

இதனால், பணியின்போது இறக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் வழிவகை ஏற்படும்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

3) தூய்மைப் பணியாளர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சமூக பொருளாதார நிலையை உயர்த்திட, சுய தொழில் தொடங்கும்போது தொழில் திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும்.

மேலும், இந்தக் கடனுதவி பெற்று தொழில் தொடங்கி கடன் தொகையைத் தவறாமல் திருப்பி செலுத்துவோருக்கு 6 சதவிகிதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.

இத்திட்டத்துக்கு ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

4) தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் பயின்றாலும் அவர்களுக்கு உயர்கல்வி கட்டணச் சலுகை மட்டுமின்றி, விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணங்களுக்கான உதவித்தொகையை வழங்கிடும் வகையில் புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

5) நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு வரும் மூன்று ஆண்டுகளில், தூய்மை பணியாளர் நல வாரியத்தின் உதவியோடு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்கள், தூய்மை பணியாளர்கள் வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டுதல் என பல்வேறு முறைகளின் கீழ் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.

கிராமப் பகுதிகளில் வசிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இந்த வீடு ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

6) தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழலால் காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்னைகளை எதிர் கொண்டு வருகின்றனர்.

இப்பிரச்னைகளுக்குத் தீர்வாக பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக வழங்கப்படும்.

இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.” என்று அறிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *