
சென்னை: ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம் 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 27.63 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் விருதுநகர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவாரூர், மதுரை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களிலும், சென்னையில் 2 மண்டலங்களிலும் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் இதர 13 மண்டலங்களிலும், புதிதாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம், வேலூர் என மொத்தம் 7 மாவட்டங்களுக்கு இந்த திட்டம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்தை சென்னை ஷெனாய் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.