
மதுரை: பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனுக்களை உயர் நீதிமன்றம் உத்தரவு எதுவும் பிறப்பிக்காமல் முடித்துவைத்தது. இதையடுத்து, பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கான தடை நீங்கியுள்ளது.
மதுரையில் 2 இடங்களில் அதிமுக கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்றவும், கொடிக் கம்பங்கள் வைப்பதாக இருந்தால் அரசிடம் அனுமதி பெற்று பட்டா இடங்களில் வைக்கவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை 2 நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது.