
ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `கூலி’ நாளை (ஆகஸ்ட் 14) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இப்படத்தில், சத்யராஜ், நாகர்ஜுனா, அமீர் கான், சௌபின், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.
மேலும், ரசிகர்கள் பலரும் கூலி படம் எல்.சி.யு-க்குள் வருமா அல்லது தனி படமா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் லோகேஷ் கனகராஜ், “கூலி படம் வெளியாக சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் இதை ஒரு கனவு போல நான் உணர்கிறேன்.
இப்படத்தை முழு சுதந்திரத்துடன் எடுக்க எனக்கு வாய்ப்பளித்த தலைவர் ரஜினிகாந்த் சாருக்கு என் மனமார்ந்த நன்றி.
இந்தப் பயணத்தை இன்னும் மறக்க முடியாததாக மாற்றிய கிங் நாகார்ஜுனா சார், ரியல் ஸ்டார் உபேந்திரா சார், சௌபின் சார், சத்யராஜ் சார், ஸ்ருதிஹாசன் மற்றும் அமீர் கான் சார் ஆகியோருக்கு நன்றி.
இப்படத்தில் பலமாகவும், அர்ப்பணிப்பின் தூணாகவும் இருந்த எனது குழுவினருக்கு ஆழ்ந்த நன்றி.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இப்படத்துக்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கின்றனர். இப்படத்தில் பங்காற்றிய ஒவ்வொருவருக்கும் என்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
மேலும், இப்படத்தில் எனக்கு முழு படைப்பு சுதந்திரத்தை வழங்கியதற்காக சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. கண்ணன் சாருக்கும் மனமார்ந்த நன்றி.

ஒட்டுமொத்தமாக முழு குழுவிற்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். இப்படத்தில் எனக்கு உதவிய எனது குழு, தி ரூட், ஜெகதீஷ், ஐஸ்வர்யா மற்றும் ராதேயன் ஆகியோருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.
என் மீதும், இப்படத்தின் மீதும் அன்பும், ஆதரவும் கொடுத்த எனது அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

இன்னும் சில மணிநேரங்களில் கூலி உங்களுடையதாக இருக்கும். உங்களுக்கு அற்புதமான திரை அனுபவமாக இப்படம் இருக்கும் என்று நான் மனதார நம்புகிறேன்.
படத்தின் எந்த ஸ்பாய்லர்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எல்லாவற்றுக்கு மேல், கூலி படமானது எனது தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கு முழுக்க முழுக்க தனி படம்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.