
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கியூபா ஒருமைப்பாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
சோசலிச கியூபாவைக் காப்போம், ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம், பிடல்காஸ்ட்ரோவின் நூற்றாண்டைக் கொண்டாடுவோம் என்ற மூன்று நோக்கங்களுடன் முப்பெரும் விழாவாக சென்னையில் நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமிக்கு செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
மு.க.ஸ்டாலின் பேசுகையில், “என்னில் பாதியான செங்கொடி தோழர்கள் அழைத்து நான் வராமல் இருக்க மாட்டேன். சமீபத்தில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றுதான் தோழர்கள் என்னை சந்தித்து இந்த விழாவுக்கு அழைப்புவிடுத்தனர்.
எனக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டிருந்தது. ஆனாலும் தோழர்களை அண்ணா அறிவாலயத்துக்கு வரச் சொல்லியதால் அவர்களை சந்தித்துவிட்டுதான் மருத்துவமனைக்குச் சென்றேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நமக்குள் இருக்கும் தோழமை தேர்தலுக்கானது அல்ல, அரசியலுக்கான நட்பு அல்ல. நமக்குள் இருப்பது கொள்கை நட்பு, கோட்பாட்டு நட்பு, லட்சிய நட்பு இதுதான் பலருக்கு கண்ணைஉறுத்துகிறது.
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கம்யூனிஸ்டுகள் மீது பாசம் பொத்துக்கொண்டு வருகிறது. நாட்டில் யார் யார் எதைப் பேசுவது என்று இல்லை. அடிமைத்தனத்தைப் பற்றி எடப்பாடி பேசலாமா?
அவருக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், இங்கு யாருக்கும் யாரும் அடிமை இல்லை. பழனிசாமி அவர்களே உங்களுக்கு தினசரி செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இருக்கிறதா என எல்லோருக்கும் சந்தேகம் இருக்கிறது. இருந்தாலும் நிச்சயமாக தீக்கதிர் படிக்கும் பழக்கம் இருக்காது. படித்திருந்தால் இப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டீர்கள். நான் நாள்தோறும் தீக்கதிர் படிக்கிறேன். கலைஞர் எனக்கு அதைக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.

கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக அவர்கள் எதையும் சுட்டிக்காட்டாமல் இல்லை. அவர்கள் சுட்டிக்காட்டிய எதையும் நாங்கள் புறக்கணித்ததும் இல்லை. ஏனென்றால் எங்களில் பாதி கம்யூனிஸ்டுகள். என்னுடைய பெயரே ஸ்டாலின்.” என்றார்.
காஸ்ட்ரோ – சேவின் நட்பு
பிடல் காஸ்ட்ரோவின் பெருமைகளைப் பேசிய ஸ்டாலின், “உலகின் பல நாடுகளில் புரட்சிகள் நடந்திருக்கின்றன. எல்லாமும் வெற்றி பெற்றதில்லை. ஒரு புரட்சியை நடத்தி, போரில் வென்று பல ஆண்டுகள் ஆட்சியை நடத்திய பேரையும் புகழையும் கொண்ட ஒருவர் உண்டென்றால் அது பிடல் காஸ்ட்ரோதான்.

17 ஆண்டு காலம் கியூபாவின் பிரதமர், 34 ஆண்டுகள் கியூபாவின் ஜனாதிபதி என அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளையெல்லாம் வென்று கியூபாவை வளர்த்துக்காட்டினார் பிடல் காஸ்ட்ரோ. பிடல் காஸ்ட்ரோவும் சே குவேராவும் பல புரட்சியாளர்களுக்கு நம்பிக்கை ஒளியாக திகழ்கின்றனர். மார்க்ஸும் ஏங்கல்சுக்கும் இருந்தது அறிவு நட்பு. காஸ்ட்ரோவுக்கும் சே குவேராவுக்கும் இருந்தது புரட்சி நட்பு.” என்றார்.
மோடியின் பலவீனம்
உலகம் முழுவதும் ஏகாதிபத்திய சதிகளை முறியடிக்க வேண்டிய தேவை இப்போது இருக்கிறது. ஏகாதிபத்திய சதி என்பது ஏதோ போரினால் வருவது மட்டுமல்ல. இப்போது அமெரிக்கா விதித்துள்ள 50% வரியும் ஏகாதிபத்திய சதிதான். இதை பாஜக அரசு கடுமையாக எதிர்த்தாலும், இதுகுறித்து வெளிப்படையான பதிலை ஒன்றிய அரசும் பிரதமர் மோடியும் பதிவு செய்ய வேண்டும்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் 5 சுற்று பத்திர பேச்சு வார்த்தைகள் முடிந்து 6வது சுற்று பேச்சுவார்த்தைக்கு நாள் குறித்துள்ள நிலையில் ஏதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக வரியை விதிக்க வேண்டும்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் பல முறை பேசியிருக்கிறார். அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட எதிர்க்கட்சியினர் கேள்விகளாக எழுப்பினோம். ஆனால் பிரதமர் மோடி அதுகுறித்து பதிலளிக்கவில்லை. இது அவர்களின் பலவீனத்தின் அடையாளம்.
ஆனால் கியூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பலத்தின் அடையாளமாக இருந்தார். அந்த நாட்டு மக்களுக்கு காவல் அரணாக இருந்தார். அதனால் உலகத் தலைவர்களுக்கு அடையாளமாக இருக்கிறார்.” என்றார்.