
புதுடெல்லி: 2023-24 நிலவரப்படி செஸ் வரி மூலம் மத்திய அரசு வசூலித்த ரூ.3.69 லட்சம் கோடி தொகையை உரிய திட்டங்களுக்கு பயன்படுத்தவில்லை என்று மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை தெரிவித்துள்ளது.
2023-24-ம் நிதி ஆண்டுக்கான மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கமான வரிகளுக்கு கூடுதலாக குறிப்பிட்ட சதவிகித தொகை செஸ் வரியாக வசூலிக்கப்படுகிறது. இந்த கூடுதல் வரி, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, எண்ணெய் துறை மேம்பாடு உட்பட பல்வேறு காரணங்களுக்காக, அந்த காரணங்களைக் குறிப்பிட்டு வசூலிக்கப்படுகிறது. 1974-ல் அமல்படுத்தப்பட்டதில் இருந்து இந்த செஸ் வரி, பல திட்டங்களுக்கு முறையாக ஒதுக்கப்படவில்லை என தெரிவித்துள்ள மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு, தொடர்ந்து செயல்பட்டு வந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் இதில் பொறுப்பு உள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.