
சென்னை: ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது போல ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கருணாநிதி, ஒரு விஜயகாந்த் தான் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். தேமுதிக பொருளாளரும், பிரேமலதாவின் சகோதரருமான எல்.கே.சுதீஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரேமலதா இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை தொடர்ந்து அதிமுக கூட்டணிக்கு தேமுதிக செல்லப் போகிறதா என்ற விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல ஒரு கட்சி பொதுச்செயலாளராக அரசியலில் சிங்க பெண்ணாக தனது சகோதரி இருக்கிறார் என்பதை குறிப்பிட்டே அவர் பதிவிட்டுள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாக நுழைவாயிலில் நடைபெற்று வரும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.