
பெங்களூரு: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக அமைச்சர் கே.என்.ராஜண்ணா, வாக்கு திருட்டு குறித்து தனது கட்சி மீதே விமர்சனம் வைத்ததை அடுத்து மேலிட உத்தரவுக்கு இணங்க அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்துள்ளார்.
கர்நாடகாவின் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.ராஜண்ணா. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவர். கடந்த 7-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, பெங்களருவின் மகாதேவபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகவும், அந்த தொகுதியின் வாக்காளர் பட்டியல் முறைகேடான முறையில் தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.