• August 10, 2025
  • NewsEditor
  • 0

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்களை தரவேண்டியது அவசியம் இல்லை என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருக்கிறது.

SIR என்னும் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு முறையில் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் பல அதிரடி திருத்தங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது.

உச்ச நீதிமன்றம்

ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருப்பவர்கள் ஒரு மாத காலத்திற்குள் தேர்தல் ஆணையத்திடம் உரிய ஆவணங்களை கொடுத்து தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருந்தது.

பிறகு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அறிக்கையில் சுமார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இறந்து போனவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்கள் என வகைப்படுத்தப்பட்டு இவர்கள் அனைவரும் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் தேர்தல் ஆணையம் இந்த வேலைகளை தொடங்கிய போதே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஏடிஆர் உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மிக முக்கியமாக வாக்காளர் சரிபார்ப்பு ஆவணமாக ஆதார் அட்டை ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என தேர்தல் ஆணையம் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இந்த ஆவணங்களை ஏற்றுக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் கொடுத்தபோது கூட அதை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்து இருந்தது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தின் துணை தேர்தல் ஆணையர் சஞ்சய் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த பதில் மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிமுறைகள் 1960 இன் கீழ் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை குறித்த விவரங்களை தனியாக தயாரிக்கவும் அதை வெளியிடவும் எந்த அவசியமும் கிடையாது. அதேபோல வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவர் ஏன் நீக்கப்பட்டார் என்பதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டியது இல்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

வாக்காளர்
வாக்காளர்

வரைவு வாக்காளர் பட்டியலில் யாராவது பெயர்கள் விடுபட்டிருந்தால் அவர்கள் செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குள் படிவம் 6 ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என்றும் அவ்வாறு சமர்ப்பிப்பவர்களிடம் வாக்காளர் பதிவு அலுவலர் கட்டாயம் விசாரணை நடத்தி உரிய காரணங்கள் தெரிவித்தால் அந்த நபரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட கட்சிகளின் கருத்துகளுக்காக காத்திருந்ததாகவும் ஆனால் யாரும் எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யாததால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த தீவிர வாக்காளர் சரிபார்ப்பு நடைமுறையில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் முன்வைத்த எந்த ஒரு கேள்விகளையும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்பது இந்த பதில் மனுவை தாக்கல் செய்திருப்பதில் மூலமாக புரிந்து கொள்ள முடிகின்றது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

குறிப்பாக நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் யார் யார் அவர்கள் ஏன் நீக்கப்பட்டார்கள் என்ற விவரங்களை ராஷ்டிரிய ஜனதாதளம் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் அதனை வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறி இருக்கின்றது. அதேபோல ஆதார் அடையாள அட்டை ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஆவணங்களாக கருதுமாறு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தல் கொடுத்திருந்தும் அதன் மீதான நிலைப்பாட்டையும் தேர்தல் ஆணையம் தெளிவாக இன்னும் கூறவில்லை.

எனவே ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் மீதும் வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குறை குளறுபடிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபடுகிறது. பாஜகவும் தேர்தல் ஆணையமும் சேர்ந்து வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள நிலையில் தற்போது தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய பதில் மனுவும் மற்றுமொரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் ஆணையம் இந்த பதில் மனுவை தாக்கல் செய்த அதே நேரத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் தலைவரும் பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல் வருமான தேஜஸ்வதி யாதவ், “பீகார் மாநிலத்தில் மூன்று லட்சம் வாக்காளர்களின் வீட்டு முகவரி பூஜ்ஜியம் என இருக்கிறது” என புதிய குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் .

சுரேஷ் கோபி
சுரேஷ் கோபி

இன்னொரு பக்கம் கேரள மாநிலம் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரான தற்போதைய மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றதிலும் கடுமையான வாக்காளர் குளறுபடிகள் இருக்கிறது என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.

இப்படி தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ச்சியான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் வரும் வாரம் இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *