• August 10, 2025
  • NewsEditor
  • 0

இரு தினங்களுக்கு முன் மகன் வாசன் முரளி கல்லூரியில் நுழையும் முதல் நாளில், வகுப்பு வரை கூடவே சென்று அனுப்பி வைத்து விட்டு வந்திருக்கிறார் நடிகர் முத்துக்காளை.

‘பையன் ஸ்கூலுக்கா போறான், கொண்டு போய் விடறதுக்கு’ என்ற கேள்வியுடன் அவரிடம் பேசத் தொடங்கினோம்.

‘’சத்திரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 6- ஆம் வகுப்பை பாதியில் நிறுத்தினவன் சார் நான். 22 ரூபாய் ஃபீஸ் கட்ட முடியாத வீட்டு நிலைமை பாதிக் காரணம்னா என்னுடைய கொழுப்பு மீதிக்காரணம். விளையாட்டுல இருந்த ஆர்வம் படிப்புல இல்லை.

’அப்பா மளிகைக் கடைக்குப் போன்னு அனுப்பினாங்க. காலை 7 மணியிலிருந்து ராத்திரி 11 வரைக்கும் வேலை. மூணு வருஷத்துக்கு மேல செய்ய முடியல. அப்பதான் படிச்சிருக்கலாமோன்னு தோணுச்சு. கூடப்படிச்சவங்கெல்லாம் பத்தாவதுல இருக்க திரும்பவும் 6வது வகுப்புல போய் உட்கார வெக்கமா இருந்ததால போகல.

பவர் லூம் வேலைக்கு போனேன். அங்க எட்டு மணி நேர வேலைதான். அப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சினிமா ஆசையும் வர ’மெட்ராஸ் போறேன்’னு சொன்னேன். ஆறாவது படிச்சுட்டு அங்க போய் என்ன செய்யப் போறன்னு எகத்தாளமாக் கேட்டு சிலர் உசுப்பேத்த டுட்டோரியல் சேர்ந்து 8வது முடிச்சேன். கூடவே கராத்தே மாதிரியான விஷயங்களையும் கத்துகிட்டேன். பிறகு சென்னை வாழ்க்கை. சினிமா வாய்ப்பு தேடி பல இடங்களுக்குப் போகையில அங்க நாலு பேர் என்ன படிச்சிருக்கனு கேட்டப்ப எட்டாவதுன்னு சொல்ல வெட்கம். உடனே பத்தாவது எழுதி பாஸ் பண்ணினேன்.

முத்துக்காளை

அந்த நேரத்துலதான் ஓப்பன் யுனிவர்சிட்டி ஒண்ணு வந்தது. அதுல சேர்ந்தா டிகிரி வாங்கிடலாம்னு தெரியவர அங்கயும் அப்ளிகேஷன் போட்டேன். பி.ஏ. வரலாறு பாஸ் பண்ணினேன்.

பிறகு சினிமாவுல கொஞ்சம் முகம் தெரிய அங்கங்க கெஸ்டா கூப்பிட்டவங்க, நான் படிச்சதையே நாலு பேருக்கு உதாரணமாச் சொல்ல, படிப்பு மேல எனக்கு இருந்த காதல் இன்னும் அதிகமாச்சு. அடுத்து எம்.ஏ. போட்டு அதையும் முடிச்சேன்.

இதுக்கு மேல என்ன படிக்கலாம்னு கேட்டப்ப டாக்டர் பட்டம் வாங்கற படிப்பு பத்திச் சொன்னாங்க.

ஆனா இந்த இடத்துல ரெண்டு டவுட் வந்திச்சு. காசு இருந்தா டாக்டர் பட்டம் வாங்கிடலாம்னெல்லாம் செய்தி வருது. அந்த மாதிரி பட்டமெல்லாம் நமக்கு வேண்டாம். நிஜமாகவே படிச்சு வாங்க முடியும்னா நான் வாங்க ரெடி.

அப்படி முடிவு செய்துட்டு போய் பி.எச்.டி பட்டம் பத்தி விசாரிச்சப்பதான் ஒரு சிக்கல் வந்திச்சு. அது பண்ணணும்னா பிளஸ் டூ கட்டாயம் முடிச்சிருக்கணும்னு சொல்லிட்டாங்க. நான் பத்தாவது முடிச்சுட்டு டிகிரி வாங்கியிருந்ததால் இப்ப பன்னிரெண்டாவது படிச்சிட்டிருக்கேன். வருகிற மார்ச் மாதம் பரிட்சை எழுதணும். பையன் காலேஜ் போறான். நான் பிளஸ் டூ எப்படி இருக்கு பாருங்க?

முத்துக்காளை

அதை முடிச்சுட்டா டாக்டர் பட்டம் வாங்க படிச்சே ஆகணும்’’ என்றவர்

‘மகன் கிட்ட தெளிவாச் சொல்லிட்டேன். என் அப்பாவுக்கு என்னைப் படிக்க வைக்க அந்தக்காலத்துல காசு இல்ல. நீ காலேஜ் போகறப்ப கூட என்கிட்ட பணம் பெரிசா இல்ல. நாலு மனுஷங்களைச் சம்பாதிச்சு வச்சுருக்கிறதால ஃப்ரீ சீட் கிடைச்சிருக்கு. நடிகர் சங்கமும், ஸ்டண்ட் யூனியனும் பேசினதுல வேல்ஸ் யுனிவர்சிட்டி சீட் தந்திருக்காங்க. உன் பையன் படிக்கிறப்பவாச்சும் கையில நாலு காசு வச்சிருந்து முடிஞ்சா இல்லாத நாலு பேருக்கு உதவற மாதிரி வரணும். அதுக்கு நல்லா படிக்கணும்பா’ன்னு சொன்னேன் சரின்னு சொல்லியிருக்கான்’ என நெகிழ்ச்சியுடன் முடித்தார்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *