
மதுரை: ரூ.2 லட்சம் கடனுக்காக ஆடு மேய்க்க வைத்து கொத்தடிமைபோல நடத்தப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த தம்பதியை மதுரை மாவட்டம் மேலூர் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர். மதுரை அனஞ்சியூர் பகுதியில் இளம் தம்பதியை கொத்தடிமைபோல ஆட்டுக் கொட்டகையில் தங்க வைத்து ஆடு மேய்க்க வைக்கப்படுவதாக மேலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்தார்.
இதையடுத்து, மேலூர் கோட்டாட்சியர் சங்கீதா, மதுரை கிழக்கு வட்டாட்சியர் மனேஷ்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு கைக்குழந்தையுடன் காட்டுப் பகுதியில் ஆடுகளை மேய்த்த தம்பதியை மீட்டனர். விசாரணையில், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பெருமங்களூரைச் சேர்ந்த ரகு (23), ராதா (22) என தெரிய வந்தது.