
ராமநாதபுரம்: ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மதுரை-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள்,உறவினர்கள் கைக்குழந்தையுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்துக்கும் மேலாக மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று (ஆக.09) காலை 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் தங்கச்சிமடத்தை சேர்ந்த டல்லஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு இலங்கை மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அந்த படகை சிறைபிடித்தனர். பின்னர் படகிலிருந்த டல்லஸ்(56), சிலைடன் (26), அருள் ராபர்ட் (53), லொய்லன் (45), ஆரோக்கிய சான்ரின் (20), பாஸ்கர் (45),ஜேசு ராஜா (32) ஆகிய ஏழு மீனவர்களை கைது செய்து, மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.