• August 9, 2025
  • NewsEditor
  • 0

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி பகுதியை சேர்ந்த புளியஞ்சேரி என்ற கிராமத்தை ஒட்டிய நதிநீர்கால்வாய்தான் நாம் இங்கு பார்த்து கொண்டு இருக்கிறோம். இந்த கால்வாயானது 1924-ம் வருடம் விவசாய பாசனத்திற்கு அமைக்கப்பட்ட ஒரு கால்வாய் ஆகும். இது காவேரி ஆற்றின் நதிநீர் கால்வாயாக பாபுராஜபுரத்தில் ஆரம்பித்து, புளியஞ்சேரி வழியே ஊருக்குள் வருகிறது‌.

இங்கு வசிக்கும் மக்களிடையே இந்த நீரோடையை பற்றி கேட்கையில், அவர்களின் பதில், இந்த நீரோடையானது பாபுராஜபுரத்தில் ஆரம்பித்து புளியஞ்சேரி வழியில் இன்னம்பூர் வரை விவசாய நிலங்களுக்கு நடுவே செல்கிறது என்றனர்.

மேலும், ‘ நாங்கலாம் சின்னப் பசங்கலா இருந்தப்ப இந்த நீரோடையிலத்தா குளிப்போம்’ என்றும், மற்றொருவரின் பேச்சில், ‘அப்பெல்லாம் அப்படியே தண்ணில எட்டிப்பாத்தா மொகம் தெரியும்’! என்றும்,‘குளிக்க, குடிக்க, துணி துவைக்க , வீட்டு பயன்பாட்டுக்குனு எல்லாமே இதுல வர தண்ணி தான் எங்களுக்கு’ எனவும் அவர்கள் கூறிய பதில், வியப்பில் தான் ஆழ்த்தியது.

காரணம், இப்போது இந்த நீரோடையில் நீருக்கு பதில் சாக்கடை ஓடிக்கொண்டு இருக்கிறது. மக்கள் இதில் மூட்டை மூட்டையாக குப்பைகளை கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அருகில் ஏதாவது மாநகராட்சி குப்பைதொட்டி இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில், இருக்கிறது.

ஆனால் அது பயன்படுத்தப்படாத எல்லையில் வீணாய் கிடக்கிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு குளக்கரையில் மூன்று மாநகர குப்பை தொட்டிகள் பயனற்று கிடக்கிறது.

அதைபற்றி விசாரிக்கையில், ஊராட்சி தூய்மை பணியாளர்கள் தினமும் இப்பக்கம் வருவதில்லை என்றும், குப்பை தொட்டிகளில் மக்கள் வீணான சாப்பாடு, இறைச்சிகள், பிளாஸ்டிக் பொருட்கள், அழுகிய காய்கறிகள் என்று எல்லாவற்றையும் ஒரே குப்பைதொட்டியில் போட்டு திணிப்பதன் விளைவில், அவ்விடமே நாற்றம் எடுத்து அருகில் யாரும் போகமுடியாத சூழல் உண்டாகிறது என்றனர். இதுமட்டுமல்லாமல் சாலையை ஒட்டிய இந்த கால்வாய்களில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரில் இருந்து பலதரப்பட்ட நோய்கள் வருகிறது என்றும் கூறினர்.

அரசாங்கத்திடம் இது பற்றிய புகார் அளித்தீர்களா? என்ற கேள்விக்கு, சொல்லிட்டுதா இருக்கோம், கண்டுக்க மாட்டுக்குறாங்க, வாய்க்கால் சீரமைப்பு திட்டமுனு, பொதுப்பணி துறையில பேசினோம். ‘குறிச்சி வச்சியிருக்கோமுனு’ சொல்றாங்க.

சில சமயம் இது எங்க டிபார்ட்மெண்ட் இல்ல, இதுக்கு வேற டிபார்ட்மெண்ட் அப்படினு சொல்லிடுவாங்க.

முதல்ல இந்த வாய்க்கால சீரமைக்கணும்ப்பா! ஒரே நாத்தமா அடிக்குது. கொசு தொல்ல வேற அதிகமா வந்துட்டே இருக்கு. தூங்க முடியல. அதுமட்டுமா, இங்க இருக்குறவங்க வீட்ல இருநூறு அடி ஆழத்துல இருந்து வர தண்ணியெல்லாமே சாக்கடை நாத்தம் தாப்பா வரும். நாத்தம் போறதுக்கே பத்து பாஞ்சி நிமிஷத்துக்கு மேல ஆகும்.

கிட்டத்தட்ட நூறு வருடத்திற்கு முன் வெட்டப்பட்ட ஒரு நதிநீர் வாய்க்கால் இப்போது ஒரு குப்பைகிடங்காக காட்சி அளிக்கிறது.

ஊரை சுற்றிய கால்வாய்களும், நீரோடைகளும், குளங்களும், ஏரிகளும் தான் ஒரு கிராமத்தின் வாழ்வியல் ஆதாரம் ஆகும்.

இப்படிபட்ட கால்வாய்களை சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் அதில் குப்பை கொட்டுவது, வீட்டின் கழிவுநீரை கலப்பது, சில இடங்களில் வாய்க்காலை மறித்து வீடு கட்டுவது, நிலத்தை சுரண்டுவது, ஏரிகளில் வீடு கட்டுவது போன்ற கிராம நீர்ப்பாசன வழிகளில் நாம் செய்யும் இந்த அநியாயங்கள் எதிர்கால சந்ததிகள் வாழ்வதற்கு பாதை இல்லாத ஓர் இடமாக அமைகிறது.

குப்பைகளை குப்பை தொட்டியில் போடுங்கள். மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து போடுங்கள்‌. ஆற்றிலோ, குளத்திலோ, கால்வாய்களிலோ குப்பைகளை கொட்டாதீர்கள். ஆறுகளும் நீரோடைகளும் நம்மை வாழ வைப்பதற்காகவே இருக்கின்றன.

அவற்றை உயிரோடு கொன்று விடாதீர்கள்….

இந்த கால்வாய் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உடனடி கவனம் செலுத்தி, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *