
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 9 வது நாளை எட்டியிருக்கிறது. போராட்டக்குழுவுடன் அமைச்சர் சேகர் பாபு நேற்று நள்ளிரவில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இன்று மதியம் நான்காவது கட்டப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு படி முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
நேற்றைய பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் சேகர் பாபு பேசிய ஒரு சில விஷயங்கள் போராட்டக் குழுவை அதிருப்தியில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து தாங்கள் அமைச்சருடன் பேச விரும்பவில்லை என போராட்டக் குழுவினர் இன்று காலையில் தெரிவித்திருந்தனர். இதனால் மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர் தலைமையில் நான்காவது கட்டப் பேச்சுவார்த்தை மதியம் 2 மணிக்கு தொடங்கியது.
கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் சென்ற இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியமான சில விஷயங்கள் ஆலோசிக்கப்படிருக்கிறது.

மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் போராட்டக் குழுவிடம், ‘நாங்கள் அந்த மண்டலங்களை தனியாருக்கு கொடுத்துவிட்டோம். அவர்களும் செலவு செய்து வேலையை தொடங்கிவிட்டார்கள். இப்போது ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கினால் அவர்கள் கோர்ட்டு கேஸூ என போவார்களே? அதனால் கொஞ்சம் யோசித்து முடிவெடுங்களேன்.’ என கோரிக்கை வைக்கும் தொனியில் கேட்டிருக்கிறார்.
இதற்கு பதிலாக போராட்டக்குழுவின் தரப்பில் அவர்களின் கோரிக்கைகளை இன்னும் வலுவாக எடுத்து வைத்திருக்கின்றனர். குறைந்தபட்சமாக பணி நிரந்தரம், அவுட் சோர்ஸிங் போன்ற பிரச்னைகளை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம். 31.07.25 அன்று எங்கள் ஊழியர்கள் என்ன நிலையில் இருந்தார்களோ அதே நிலையில் தொடர வேண்டும் எனவும் அதை எழுத்துப்பூர்வமாக உத்தரவாதமாக கொடுக்க வேண்டும் எனவும் போராட்டக் குழுவின் தரப்பில் கோர்ப்பட்டிருக்கிறது.

மாநகராட்சி ஆணையரும் அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் அமைச்சரிடம் பேசிவிட்டு அழைப்பதாகவும் கூறி நான்காம் கட்டப் பேச்சுவார்த்தையை முடித்து வைத்திருக்கிறார்.
போராட்டக் குழுவினர், இதுவரை அவர்களின் நிலையிலிருந்து இறங்கி வராமல் இருந்தார்கள். இப்போது எங்களிடம் கோரிக்கை வைக்கும் தொனியில் பேசுகின்றனர். இதை ஒரு படி முன்னேற்றமாகவே கருதுகிறோம் என கூறுகின்றனர்.
அதிகாரிகள் அமைச்சர்களுடன் கூடி பேசிவிட்டு அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைக்கு போராட்டக் குழுவை இன்று மாலை அழைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.