
இந்திய ராணுவம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி. மாய்ஸ் அமர்வு, “கருத்துரிமை என்ற பெயரில் எல்லாவற்றையும் பேச முடியாது. உண்மையான இந்தியராக இருந்தால் ராணுவத்தை விமர்சித்திருக்க மாட்டீர்கள்” என ராகுல் காந்தியை கடிந்து கொண்டனர். இது தொடர்பாக நடிகர் ஆடுகளம் கிஷோர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நீதியின் செய்தித் தொடர்பாளராக இருக்க வேண்டிய உச்ச நீதிமன்ற நீதிபதி, ஆளும் கட்சியின் மோசமான அரசியலின் செய்தித் தொடர்பாளராக மாறிவிட்டாரா..? சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ஆயிரக்கணக்கான சாட்சிகள் இருந்தபோதிலும், அவர் அரசை நோக்கி ஒரு கேள்விக் கூட கேட்கவில்லை.
அரசு மூடிமறைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் உள்ள உண்மைகளைக் கண்டறிய முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக அதை அம்பலப்படுத்தியவரை குறிவைக்க அவர் தேர்ந்தெடுத்த கேள்வி “நீங்கள் ஒரு உண்மையான தேசபக்தராக இருந்தால்…” தேசபக்தி என்ற போர்வையில் தனது துரோகத்தை மறைக்கும் Non biologicals-ன் அரசியல் மொழியைப் பயன்படுத்தியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் துரோகத்தை அம்பலப்படுத்தும் முயற்சியில் நிற்கும் ஒரு இந்திய குடிமகனை அவதூறு செய்ய முயற்சிப்பது, உச்ச நீதிமன்றத்தின் மதிப்புக்குரிய நீதிபதி, ஆளும் கட்சி செய்த, செய்து கொண்டிருக்கும் அந்தச் செயலில் தன்னை ஒரு பங்காளியாக நிரூபித்துள்ளாரா?” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.