
சென்னை: தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் 100 பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மானியத்துடன் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, அமைப்பு சாரா பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு ஆட்டோக்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தற்போது தொழிலாளர் நலத்துறை சார்பில் 20 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆண்களுக்கு நிகராக பெண்களும் முன்னேற வேண்டும் என ஏராளமான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.மகளிர் விடியல் பயணம் திட்டம், புதுமை பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெண்களின் முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களை முதல்வர் உருவாக்கி கொடுத்து கொண்டிருக்கிறார்.