
சென்னை: மாற்று இடங்களில் தங்களுக்கு வீடுகளை ஒதுக்கி தர கோரி, மெரினா காமராஜர் சாலையில் திருநங்கைகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழக அரசு சார்பில், சென்னை கண்ணகி நகரில் திருநங்கைகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டது. அதில், நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
அங்கு அடிக்கடி குற்றங்கள் நடப்பதாகவும், குடியிருக்க போதிய வசதிகள் இல்லை எனவும் திருநங்கைகள் குற்றம் சாட்டி வந்தனர். அதனால், மயிலாப்பூர் உள்பட சென்னையில் வேறு இடங்களில் தங்களுக்கு வீடுகள் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சென்னை மெரினா, காமராஜர் சாலையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.