
சென்னை: “தென்கிழக்கு ஆசிய நாடுகளை இணைக்கும் பாலமாக ராமாயணம் திகழ்கிறது” என்று ‘சிங்கா 60’ கலைத் திருவிழா நிகழ்ச்சியில் சிங்கப்பூர் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் 60-வது தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்னையில் ‘சிங்கா 60’ என்ற 10 நாள் கலைத் திருவிழாவை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கோலாகலமாக நடத்தி வருகின்றன. விழாவின் 6-ம் நாளான நேற்று அடையாறு பத்மநாபா நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில்‘ஆசிய கலாச்சாரங்களில் ராமாயணம்’ என்ற தலைப்பில் சிறப்பு கலை சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.