
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ஆவின் பால் விற்பனை 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். ஆவின் முகவர்களுக்கு உரைக்கலன் வழங்குதல் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஆணைகளை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ஆவின் பால் விற்பனை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.25 கோடிக்கு விற்பனையானது. இந்த ஆண்டு சுமார் ரூ.33 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இதன்மூலம், கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த பால் உற்பத்தியை பெருக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.