
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையில், யாதவர், முஸ்லிம்களுக்கு எதிரான சுற்றறிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் ரத்து செய்துள்ளார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் அரசு நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. 57,000-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் அரசு பொது நிலங்கள் உள்ளன. இவற்றில், கிராம சபை நிலம், குளங்கள், கொட்டகைகள், உரக் குழிகள், தகன மைதானங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைக்காக, பஞ்சாயத்து ராஜ் துறையின் தலைமை அலுவலக இணை இயக்குநர் சார்பில் ஒரு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது. அது அனைத்து 75 மாவட்ட ஆட்சியர்கள், அரசு நில நிர்வாகப் பிரிவு துணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. அதில், யாதவர்கள், முஸ்லிம்களின் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு புகார் மனுக்கள் வந்தன.