
துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
சென்னை ரிப்பன் மாளிகை பகுதி எப்போதுமே பரபரப்பாக போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதியாகத்தான் இருக்கும். அந்தப் பகுதி இப்போது இன்னும் பரபரப்பாக நெரிசலாக மாறியிருக்கிறது. காரணம், துப்பரவுத் தொழிலாளர்கள் போராட்டம். 1000 க்கும் மேற்பட்ட துப்பரவுத் தொழிலாளர்கள் சேர்ந்து ரிப்பன் மாளிகைக்கு வெளியே பிளாட்பார்மில் தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மழை, வெயில் பாராமல் தொடரும் இவர்களின் போராட்டம் ஐந்தாவது நாளை எட்டியிருக்கிறது. துப்பரவு பணியாளர்களின் கோரிக்கை என்ன என்பதை அறிய அவர்களின் போராட்டக் களத்துக்கு சென்று வந்தோம்.
‘எங்களோட குரல் கேட்கலயா?’
ரிப்பன் மாளிகையின் நுழைவுவாயிலில் இருக்கும் பிளாட்பார்மில் தார்பாயை விரித்து அமர்ந்திருக்கின்றனர். ‘குழந்தை குட்டியை எல்லாம் விட்டுட்டு நாலு நாள் இங்கதான்ய்யா கிடக்குறோம். அந்த மேயரு அதுவும் ஒரு பொண்ணுதானே. அதிகாரிங்க அத்தனை பேரு இருக்காங்களே. எல்லாரும் இந்த வழியாத்தானே போறாங்க, வராங்க. சிஎம் கூட இப்டித்தானே போறாரு. யாரு கண்ணுலயுமே நாங்க படலயா? எங்க கோரிக்கை என்னன்னு கேட்க யாருக்குமே மனசில்லைய்யா?’ என ஆதங்கத்தில் பொறுமுகின்றனர் அங்குள்ள தொழிலாளர்கள்.

போரட்டத்தில் ஈடுபட்டிருக்கும் துப்பரவு பணியாளர்களில் 80% க்கும் மேற்பட்டவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களிடம் பேசிப் பார்த்ததில் பெரும்பாலானோர் கணவரை இழந்தவர்களாகவும் கணவரால் கைவிடப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த வேலை மட்டுமே அவர்களின் ஒரே பிடிமானமாக இருக்கிறது. துப்புரவு பணியின் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் தங்களின் பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்னும் சிலரால் அதுவும் முடியாமல் தங்களின் பிள்ளைகளையும் கூலி வேலைக்கு அனுப்பிவிட்டு, அன்றாடத்தை ஓட்டுவதற்காகவும் கடன்களை அடைப்பதற்காகவும்தான் இந்த பணிக்கு வந்துகொண்டிருக்கின்றனர். அதற்கும் ஆபத்து எனும் போதுதான் இப்போது போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.

‘எனக்கு 26 வயசு இருக்கும்போது என் புருஷன் இறந்துட்டாரு. ஆட்டோதான் ஓட்டிட்டு இருந்தாரு. குடிச்சு குடிச்சே வாழ்க்கையை கெடுத்துக்கிட்டாரு. அவரு இறந்ததுக்கு அப்புறம் 15 வருசமா நான் இந்த வேலைக்கு வந்துட்டு இருக்கேன். என் வருமானத்துலதான் குடும்பம் ஓடுது. எதோ என்னால முடிஞ்சது ஒரு பையனை ஐடிஐ படிக்க வச்சேன். இன்னொரு பையன் +2 வரை படிச்சான். பொண்ணு +1 வரை படிச்சுது. ஒரு பையனுக்கும் பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டேன். எல்லாத்தயும் இந்த வேலைக்கு வந்து இந்த வருமானத்துலதான் செஞ்சிருக்கேன். இப்போ இந்த வேலையே இல்லன்னு விரட்டுறாங்க.’ என பேசும்போதே ஆத்திரமடைகிறார் ஜோதி என்கிற 43 வயது பெண்.

மேற்கொண்டு பேசியவர், ‘எல்லாரும் 15-20 வருசமா வேலை பார்த்திருக்கோம். ஆரம்பத்துல 6000 ரூபாய் சம்பளத்துக்கு நான் வேலைக்கு வந்தேன். ஊதியத்தை உயர்த்தி கொடுங்கன்னு அவ்வளவு போராடியிருக்கோம். உழைப்போர் உரிமை இயக்கம் மூலமா அதோட தலைவர் கு.பாரதி எங்களுக்காக நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்தாரு. நீதிமன்ற உத்தரவின் பேருல போன வருசம்தான் எங்களோட ஊதியம் 23,000 ரூபாயா உயர்ந்துச்சு. முழுசா ஒரு வருசம் கூட முடியல. அதுக்குள்ள மண்டலம் 5,6,7 ன்னு 3 மண்டலத்தையும் தனியார் கையில கொடுக்கப் போறதா சொல்லிட்டாங்க. அந்தத் தனியார் நிறுவனத்துக்கிட்ட ஒப்பந்தம் போட்டு நாங்கெல்லாம் வேலைக்கு வரணுமாம்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி அந்தந்த வார்டுல இருக்குற அலுவலகங்களுக்கு வழக்கம் போல கையெழுத்து போட்டுட்டு வேலையை தொடங்க போனோம். எங்க யாரையும் கையெழுத்து போட விடலை. இனிமே நீங்க NULM தொழிலாளர்கள் கிடையாது. அந்தத் தனியார் நிறுவனத்துக்கிட்ட போயி பேசிக்கோங்கன்னு சொல்லிட்டாங்க. தனியார் நிறுவனம் எங்களுக்கு 16,000 ரூபாய்தான் சம்பளம் தருவோம்னு சொல்றான். அதுலயும் 2000 ரூபாயை ஓய்வூதியமா பிடிச்சுக்குவானாம். 14000 ரூபாயை வச்சு சென்னையில எப்டி குடும்பத்தை நடத்துறது? அதுலயும் இவங்க இத்தனை வருசமா எங்க உழைப்பையெல்லாம் உறிஞ்சிருக்காங்க. அதுக்கு என்ன மதிப்பு இருக்கு? ஒரு தலைவலி காய்ச்சல்னா கூட எங்களால லீவு போட முடியாது.

லீவு போட்டா ஒரு நாள் சம்பளத்தை பிடிச்சுக்குவாங்க. அதுனால என்ன நோவுன்னாலும் வேலைக்கு வந்துருவோம். மாசத்துல 30 நாளும் வருசத்துல 365 நாளும் வேலை பார்த்திருக்கோம். அந்த 23000 ரூபாய் சம்பளத்தை தவிர எங்களுக்கு வேற எந்த பலனும் கிடைச்சது இல்ல. பண்டிகைக்கு ஒரு போனஸ் கூட கிடையாது. இத்தனையையும் சகிச்சுக்கிட்டு வேலை பார்த்திருக்கோம். யாராவது குப்பை அள்ளுறத விரும்பி பண்ணுவாங்களா? எங்க நிலைமை, எங்க வாழ்க்கை அப்டி இருக்கு. நாங்க குப்பை அள்ள வந்துட்டோம். அதுக்குன்னு எங்களையும் 15-20 வருசம் உழைப்பையெல்லாம் உறிஞ்சிட்டு குப்பை மாதிரியே தூக்கி போடுவாங்களா?’ என கண்கள் சிவக்க கேட்கும் ஜோதியின் வார்த்தைகளில் அத்தனை நியாயம் இருக்கிறது.
‘கொரோனோ நோயாளிகளோட கக்கூஸை கழுவுனோமே…’
‘கொரோனா அப்போ வீட்ல எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி, பாதிக்கப்பட்ட இடங்கள்ல தகரம்லாம் அடிச்சு வச்சிருந்தாங்க. அப்போவும் நாங்க தெருவுல நின்னு வேலை பார்த்தோம். ஜனங்க எங்களை கையெடுத்து கும்பிட்டாங்க. பக்கத்துல ஒரு ஆர்ட்ஸ் காலேஜ் இருக்கு பாருய்யா…அங்க கொரோனாவால பாதிக்கப்பட்டவங்களை தங்க வச்சிருந்தாங்க. அந்த காலேஜூ கக்கூஸ நான்தான் கழுவுனேன். எண்ணூர்ல ஒரு கப்பல்ல இருந்து எண்ணெய் கொட்டுச்சு பாரு. அதுக்கு எங்களைத்தான் இங்க இருந்து கூட்டிட்டு போனாங்க. கால கவர் பண்ற மாதிரி எது போட்டாலும் கால் உள்ள அமுங்குதுன்னு வெறும் கால்ல இறங்கி அந்த எண்ணெய்யை எல்லாம் வலிச்சு வாளில அள்ளுனோம்.

ஜெயலலிதா அம்மா இறந்தப்போ அவர் சமாதிலேயே 10 நாள் ட்யூட்டி போட்டாங்க. அவ்வளவு ஜனம் தினமும் வந்துட்டு போச்சு. அத்தனை குப்பையையும் உடனே உடனே அள்ளி க்ளீன் பண்ணினோம். நாள் கிழமை பார்க்காம இவங்களுக்காக வேலை பார்த்திருக்கோம். ஆனா, இப்போ எங்களுக்கு ஒரு குறைஞ்சபட்ச மரியாதை கூட இல்லை. இவ்வளவு மெயின் ஆன இடத்துல போராடுறோம். ஒரு அதிகாரி வந்து எட்டிப் பார்க்கல.’ என வேதனையுடன் கூறுகிறார் குட்டியம்மாள் என்கிற இன்னொரு துப்புரவு பணியாளர்.
’30 வருச உழைப்புக்கு இதுதான் மதிப்பா?’
‘குப்பை வாரும்போது தடுக்கி விழுந்து கையை உடைச்சுக்கிட்டேன். 7 கட்டு போடணும்னு சொன்னாங்க. இப்போ மூணாவது கட்டு போட்ருக்கேன். இத்தோடதான் வேலைக்கு போயிட்டு இருந்தேன் போராடவும் வந்திருக்கேன். நாங்க இல்லன்னா இந்த ஊரு நாறிப் போயிடும் நாறி..’ என ஆவேசமாகிறார் கிருபா என்கிற பெண். அவரை ஆசுவாசப்படுத்தி விட்டு பொறுமையாக பேசத் தொடங்கினார் பவானி என்கிற பெண்.
‘1996 இல் இருந்து கிட்டத்தட்ட 30 வருசமா வேலை பார்க்குறேன். சென்னை மாநகராட்சியில இருக்குற கழிப்பிடங்களை சுத்தம் செய்றதுக்காக ஒப்பந்த அடிப்படையில வேலைக்கு சேரந்தேன். அன்னைக்கு என்னோட சம்பளம் 700 ரூபாய். ஒரு கட்டத்துல கழிப்பிடங்களை வெளியே வேறு நிறுவனங்களுக்கு கொடுத்துட்டோம்னு சொல்லி எங்களை NULM க்குள்ள சேர்த்து துப்புரவுப் பணியாளரா மாத்துனாங்க. என் புருஷன் 2012 லேயே இறந்துட்டாரு. எனக்கு ஒரே ஒரு மவதான். அவளுக்கு டாக்டர் ஆகணும்னு ஆசை. ஆனா, இங்க வேலை பார்த்துக்கிட்டு என்னால என்ன செய்ய முடியும்? 12 ஆம் க்ளாஸ் முடிச்ச உடனேயே கட்டி வச்சுட்டேன். பொண்ணுக்கு நாலு புள்ளைங்க. அவ புருஷன் ஒரு குடிகாரன்.

விட்டுட்டு ஓடிட்டான். இப்போ என் பொண்ணையும் பேரப் பிள்ளைங்களையும் சேர்த்து நான்தான் பார்த்துக்குறேன். 30 வருசமா வேலை பார்த்துருக்கேன். வாங்குற சம்பளத்தை விட குறைஞ்ச சம்பளத்துக்கு போங்கன்னா என்ன நியாயம்? இத்தனை வருசம் உழைச்சதுக்கு என்ன மதிப்பு இருக்கு? எங்க ஓட்டை மட்டும் கேட்குறீங்க? மக்களோட இருக்கேன்னு விளம்பரம் பண்ணிக்கிறீங்க? எங்களுக்கு வேலை கொடுத்தா…வேலைக்கேத்த ஊதியம் கொடுத்தா…எங்க குடும்பமும் வாழுமே. முதலமைச்சர் ஐயா பேரச் சொல்லி என் பேரப் புள்ளைங்களும் படிச்சு ஆளாகி வந்து நிப்பானுகளே…’ என வேதனையில் உடைந்து அழுகிறார் பவானி.
‘நீங்க எதிர்க்கட்சியா இருக்கும் போது அவுட் சோர்ஸ் பண்ணாம, தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்கி அவங்களுக்கு வேலை கொடுங்கன்னு எடப்பாடிக்கு கடிதம் எழுதுனீங்களே. நீங்க எழுதுனததான நாங்க கேட்குறோம். அதுக்கு இப்படி இந்த பொம்பளைங்க வயித்துல அடிக்கிறீங்களே. 40 வயச தாண்டி இங்க இருக்குற பெண்களுக்கு அந்த தனியார் கம்பெனிக்காரன் வேலை கொடுப்பானா? இப்போ வேலை கொடுத்தாலும் எத்தனை வருசம் வேலையில வச்சிருப்பான்? மக்களுக்காக எதுவும் செய்ய முடியலன்னா எதுக்கு உங்களுக்கு இந்த ஆட்சி?’ என்கிற ஜோதியின் கேள்வியால் அந்த வெள்ளை அத்தனை கறைபடிந்ததாக காட்சியளிக்கிறது.

அங்கே போராடிக் கொண்டிருக்கும் அத்தனை பேரும் இப்படியான எளிய மக்கள். எல்லாரும் அன்றாடங் காட்சிகள். 30 நாளும் வேலை. 365 நாளும் வேலை. உடம்பு சரியில்லாமல் விடுப்பு எடுத்தால் கூட ஒரு நாள் சம்பளத்தை பிடித்துவிடுவார்கள் என அவர்கள் சொல்லும் போது ஏனோ நெஞ்சம் கீறியதைப் போல வலி. அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது அருவருப்பாக இருக்கிறது. அத்தனை ஆண்டுகளாக விடுப்பில்லாமல் ஓடி ஓடி நகரத்தை தூய்மைப்படுத்தி சிங்காரமாக மாற்றும் மக்களின் துயர் மீது கவனமே கொடுக்காமல் எப்படி இருக்க முடிகிறது? அதுவும் ரிப்பன் பில்டிங் சென்னை மாநகராட்சியின் இதயம். அதற்கு வெளியே மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளே இருக்கும் அதிகாரிகளுக்கு இவர்களின் குரல் கேட்கவில்லை. எளிய மக்களுக்கும் அரசை இயக்கும் அதிகார வர்க்கத்துக்கும் இடையில் எவ்வளவு தொலைவு இருக்கிறது என்பதற்கான அவல சாட்சிதான் இந்தப் போராட்டம்.