
சென்னை: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் (81) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் நேற்று காலமானார். அவரது மறைவையொட்டி தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்திகளில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். சுரண்டலுக்கு எதிரான இடைவிடாத எதிர்ப்பு மற்றும் சமூக நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அவரது வாழ்க்கை வரையறுக்கப்பட்டது. பழங்குடியின மக்களின் பல்லாண்டுகால உரிமை கோரலான புதிய மாநிலத்தை தோற்றுவித்த அரசியல் சக்தி. அவரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.