
புதுடெல்லி: எல்லையில் 2,000 சதுர கி.மீ. நிலத்தை சீனா ஆக்கிரமித்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த 2022 செப்டம்பர் 7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் ‘பாரத ஒற்றுமை’ நடைபயணத்தை தொடங்கினார். கடந்த 2023 ஜனவரி 30-ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் அவரது நடைபயணம் நிறைவு பெற்றது. இந்த பயணத்தின் போது, கடந்த 2022 டிசம்பர் 16-ம் தேதி செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார். அவர் கூறும்போது, “எல்லையில் 2,000 சதுர கி.மீ. நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களை, சீன ராணுவம் கொலை செய்தது. சமீபத்தில் அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவை அனைத்தையும் நாட்டு மக்கள் கவனித்து கொண்டிருக்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.