
சென்னை மதுரவாயலில் இருந்து பெங்களூர் வரை தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த 5 ஆண்டு களுக்கும் மேலாக மந்தகதியில் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம் பகுதியில், இரு வேறு இடங்களில் தற்போது, பாலம் கட்டுவதற்கு, சாலையை ஒட்டி 15 அடி நீளத்துக்கும், 10 அடி ஆழத்திலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
சாலையை ஒட்டி பணிகள் நடந்து வரும் நிலையில் பள்ளத்தை சுற்றி, இரும்பு தடுப்புகள் அமைக்கப்படாமலும், எச்சரிக்கை பலகை இல்லாமலும் பாதுகாப்பற்ற முறையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலம் கட்டும் பணிகள் காரணமாக சாலையும் குறுகலாக உள்ளதால், கனரக வாகனங்களை முந்தி செல்ல முயன்று, இருசக்கர வாகனங்கள்,அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.