
தூத்துக்குடி: தூத்துக்குடி மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், இந்தியாவில் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், இந்நாள் தென் மாவட்டத்தின் ஒரு பொன் நாள் என்றும் அவர் கூறினார்.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. வின்பாஸ்ட் ஆசியாவின் தலைமை செயல் அதிகாரி ஃபாம் சான் சாவ் தலைமை வகித்தார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, பெ.கீதாஜீவன், அனிதா ஆர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.