
திருவனந்தபுரம்: கேரளாவின் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ரைரு கோபால். மருத்துவரான அவர் அங்குள்ள எல்ஐசி அலுவலகத்துக்கு அருகே மருத்துவமனை நடத்தி வந்தார். அவரது தந்தை ஏ.ஜி.நம்பியாரும் புகழ்பெற்ற மருத்துவர் ஆவார். “பணம் சம்பாதிப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் மருத்துவத்தை ஒருபோதும் பணம் சம்பாதிக்கும் தொழிலாக பார்க்கக்கூடாது’’ என்று தந்தை கூறிய அறிவுரைகளை ரைரு கோபால் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார்.
கண்ணூர் எல்ஐசி அலுவலகம் அருகே நடத்தி வந்த மருத்துவமனையை தனது வீட்டுக்கு கோபால் மாற்றினார். அனைத்து நோயாளிகளிடமும் 2 ரூபாய் மட்டுமே கட்டணம் பெற்று சிகிச்சை அளித்தார். இதன் காரணமாக அப்பகுதி மக்கள், ரைரு கோபாலை, இரண்டு ரூபாய் மருத்துவர் என்று அழைத்தனர்.