
சென்னை மாநகராட்சி சார்பில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள ரூ.30.52 கோடி செலவில், 477 நீர் இறைக்கும் டிராக்டர்களை வாடகைக்கு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகரம் நாளுக்கு நாள் கான்கிரீட் மயமாகி வருகிறது. மாநகராட்சியின் திட்டங்களும் கான்கிரீட் சாலை, கான்கிரீட் மழைநீர் வடிகால், கான்கிரீட் நடை பாதை என செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மழை காலங்களில் மழைநீர் நிலத்தில் ஊருவது தடுக்கப்பட்டு, நீர் தேங்கும் பகுதிகள் அதிகரித்து வருகின்றன. தற்போது மெட்ரோ ரயில் பணிகள், நெடுஞ்சாலைத் துறை, சென்னை குடிநீர் வாரியம், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை சாலைகளை தோண்டி தடுப்புகள் ஏற்படுத்துவதால், வழக்கமாக நீர் வழிந்தோடுவது பாதிக்கப்பட்டு, மழைநீர் தேக்கம் ஏற்படுகிறது.