
சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் தோனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். மருத்துவமனையை திறந்து வைத்து விட்டு ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்யும் வகையில் சில முக்கியமான விஷயங்களை தோனி பேசியிருந்தார்.
தோனி பேசியதாவது, ‘போனில் பேசுவது அத்தனை சௌகரியமாக இருக்காது. எனக்கு ஒருவருடன் பேசும்போது அவரின் உணர்வுகள் என்னவாக இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஒருவரை நேரில் பார்க்கும் போது நாம் பேசவில்லையென்றாலும் உணர்வுகளின் மூலம் நிறைய விஷயங்களை புரிந்துகொள்ள முடியும். போனில் அது முடியாது.
வேண்டுமானால் பழைய போனை மட்டும் பயன்படுத்துங்கள். சிவப்பு பட்டனும் பச்சை பட்டனும் மட்டும் இருக்குமே அந்த போனை பயன்படுத்துங்கள்.

தோல்விகள்தான் நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கும். விஷயங்களை கற்றுக்கொள்ள நீங்கள் தவறு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. எதிரணியினர் செய்யும் தவறுகளிலிருந்து கூட நான் பாடம் கற்றுக்கொள்வேன்.
நிறைய புதிய மனிதர்களைச் சந்தியுங்கள். உங்களின் கண்களையும் காதுகளையும் திறந்து வையுங்கள். அப்போதுதான் நிறைய அனுபவங்களை பெற முடியும்.
வாழ்க்கை அழகானது. சக மனிதர்களிடம் உரையாடுங்கள். உங்களின் சக பணியாளர்களிடம் ‘வாழ்க்கை எப்படி போகிறதென வினவுங்கள். அப்படி செய்தால் உங்களின் கடினமான காலத்தில் அவர் அதே விஷயத்தை உங்களுக்கும் செய்வார்.’ என்றார்