
சென்னை: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இந்த முகாம் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முகாமில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு மருத்துவ பிரிவுகளை பார்வையிட்டார். பயனாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு, அவர்களுடன் கலந்துரையாடினார். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலி கருவிகள், அடையாள அட்டைகளையும் வழங்கினார்.