
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளது அவரது பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், அவருக்கு நேரம் கொடுக்கப்படவில்லை.
ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டதே தனக்குத் தெரியாது என்றார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். மேலும் அவர் கேட்டுக்கொண்டால் வரும் 26ம் தேதி பிரதமரிடம் நேரம் வாங்கித் தருவதாகக் கூறினார்.
இந்தச் சூழலில் நயினார் நகேந்திரன் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறுவதை நிறுத்த வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
ஓபிஎஸ் அறிக்கை:
“தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் ‘தன்னிடம் சொல்லியிருந்தால் மாண்புமிகு பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. எனவே, இது குறித்த உண்மை நிலையைத் தெரிவிப்பது என் கடமை. திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை ஆறு முறை கைப்பேசியில் தொடர்புகொள்ள நான் முயன்றேன். ஆனால், திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, திரு. நயினார் நாகேந்திரன் அவர்களிடம் பேச வேண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.
அதற்கும் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. இரா. வைத்திலிங்கம் மற்றும் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோரை கலந்தாலோசித்த பின்னர், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டு 24-07-2025 அன்று நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.
உண்மையிலேயே, திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை நான் சந்திக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்குமேயானால், நான் கைப்பேசியில் அழைத்த அழைப்பைப் பார்த்தோ அல்லது குறுஞ்செய்தியின் அடிப்படையிலோ என்னிடம் பேசியிருக்கலாம். அல்லது எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாட்டினைச் செய்திருக்கலாம். ஆனால் எதையும் செய்யவில்லை.
இதிலிருந்து, நான் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களைச் சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. எனவே, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களைச் சந்திப்பது தொடர்பாக நான் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களிடம் சொல்லவில்லை என்பது சரியல்ல, உண்மைக்குப் புறம்பானது.
திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கிறார். ஆகவே, இனியாவது அவர் உண்மை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்.