
சென்னை: தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள “உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் இன்று (ஆக.2) புதிதாக தொடங்கப்படவுள்ள ‘நலம் காக்கும் மருத்துவம்’ போன்ற அரசின் திட்டங்களில் ‘உயிருடன் வாழும்’ அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி அரசு சார்பில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்களில் தமிழக முதல்வரின் புகைப்படத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் உயிருடன் வாழும் அரசியல் தலைவர்களின் பெயர்களை அரசி்ன் திட்டங்களில் பயன்படுத்தக் கூடாது.