
சென்னை: சிங்கப்பூரின் 60-வது தேசிய தினத்தை முன்னிட்டு ‘சிங்கா 60’ கலைத் திருவிழா சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற இந்திய-சிங்கப்பூர் ஓவிய, சிற்பக்கலைஞர்களின் படைப்புகள் பார்வையாளர்களை வியக்க வைத்தன.
சிங்கப்பூர் நாட்டின் 60-வது தேசிய தினம் விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்னையில் ‘சிங்கா 60’ என்ற பிரம்மாண்ட கலை திருவிழாவை 10 நாட்கள் நடத்துகின்றன. இசை, நாடகம், ஆவணப் படம், அரசியல், கலை, கலாச்சாரம், சமையல், குழு விவாதம், கருத்தரங்கம் என பல்சுவை நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இத்திருவிழா அடையாறு பத்மநாபா நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.