
மகாராஷ்டிராவில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி மாலேகான் பகுதியிலுள்ள மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், 6 பேர் உயிரிழந்தனர், 100-கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பான விசாரணையில், சம்பவம் நடந்த பகுதியில் பைக்கில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது காரணம் என்று தெரியவந்தது.
கைதும் ஜாமீனும்..!
பின்னர் தடயவியல் சோதனையில், அந்த பைக் பா.ஜ.க முன்னாள் எம்.பி பிரக்யா சிங்குக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, அவர் உட்பட முன்னாள் ராணுவ அதிகாரி ரமேஷ் உபாத்யாய், ராணுவ உளவுப் பிரிவு அதிகாரி சுதாகர் சதுர்வேதி என 7 பேர் கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
போதிய ஆதாரம் இல்லை
17 ஆண்டுகளாக நடைபெற்று இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் வந்த நீதிமன்ற விசாரணை அனைத்தும் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வாறிருக்க, நேற்று முன்தினம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது” என்று பேசியிருந்தார்.
அமித் ஷா இவ்வாறு கூறிய அடுத்த நாளான நேற்று (ஜூலை 31) நீதிமன்றம், மாலேகான் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-மம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு, “குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கெதிராக நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை” என அந்த 7 பேரையும் விடுத்தது.
இது நீதியே அல்ல
அமித் ஷா நாடாளுமன்றத்தில் மறைமுகமாக நற்சான்றிதழ் கொடுத்த அடுத்த நாளே, மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கெதிராக போதிய ஆதாரம் இல்லை என விடுத்திருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
அந்த வரிசையில், இது தொடர்பாகத் தனியார் ஊடக நேர்காணலில் பேசியிருக்கும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவரும், எம்.பி-யான அசாதுதீன் ஒவைசி, “தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு நாம் என்ன சொல்லப் போகிறோம்?

RDX ஒரு பிளாஸ்டிக் வெடிபொருள். அதைப் பயன்படுத்திய இவர்கள் யார்?
அவர்களைப் பிடித்து சிறைக்கு அனுப்பாவிட்டால், அவர்கள் தண்டனையின்றி சுற்றித் திரிவார்கள்.
இது நீதியே அல்ல. நரேந்திர மோடி அரசும், மகாராஷ்டிரா அரசும் ரயில்வே குண்டுவெடிப்பு வழக்கில் நடந்ததைப்போல 24 மணி நேரத்திற்குள் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லும் என்று நம்புகிறேன்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி முக்கியம்.” என்று கூறியிருக்கிறார்.