
புதுடெல்லி: இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுடன் இணைந்து தெற்காசியாவிலேயே மிக பெரிய கச்சா எண்ணெய் கிடங்கு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பு இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெய் ஆகியவற்றை வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இது மட்டுமின்றி, தாமிரம் மற்றும் அது தொடர்பான பொருட்களின் இறக்குமதிக்கு 50 சதவீத வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.