
“நீண்ட நெடிய காலமாக அதிமுக-வில் பயணித்து வந்தீர்கள். இப்பொழுது திமுக-வில் இணைகிறீர்கள். எப்படி இருக்கு திமுக?”
“இனிமேதான் பாக்கணும். என்னைய பொறுத்த வரையிலும் நல்லாத்தான் இருக்கு. முதலமைச்சர் தளபதி என்னை வரவேற்ற விதம் என்னுள் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.”
“நீங்க இவ்ளோ காலமா எதிர்த்து அரசியல் பண்ண கட்சி திமுக. இப்ப திமுகவை பற்றியே பாசிட்டிவ்வான விஷயங்களை சொல்ல வேண்டியிருக்கிறது. அதை நீங்க எப்படி பாக்குறீங்க?”
“சொல்ல வேண்டி இருக்கிறதுன்னு இல்ல. நான் விரும்பித்தான் சொல்றேன். நெகட்டிவ் அதிமுகவுக்கு போயிடுச்சு.”
“பொன்னையன் போன்றவர்கள், அன்வர் ராஜா அவர்கள் எம்ஜிஆருக்கும் விசுவாசமா இல்ல அம்மாவுக்கும் விசுவாசமா இல்ல. இப்போ எடப்பாடிக்கும் விசுவாசமா இல்ல. அப்படின்னு ஒரு அறிக்கை கொடுத்திருக்காரு. அத நீங்க எப்படி பாக்குறீங்க?”
“இப்போ அண்ணா திமுகவுல இருப்பவர்கள் எல்லாம் எம்ஜிஆரின் விசுவாசிகள் இல்லை. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் என்றால் என்னவென்றே அவருக்கு தெரியாது. அம்மாவின் கொள்கையிலிருந்து இப்பொழுது இருக்கின்ற அதிமுக தலைமை விலகிச் செல்கிறது; சனாதனத்தின் பின்னால் செல்கிறது. அதனால்தான் நான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவிற்கு வந்திருக்கிறேன்.”
“பாஜக கட்டுப்பாட்டுக்குள் அதிமுக போயிடுச்சுன்னு நினைக்கிறீங்களா?”
“ஆமா. எங்கள் கூட்டணி என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும். இந்த என்டிஏ கூட்டணி ஆட்சிகள் பிஜேடியிடம் வரும். அப்படி இடம் பெறுகின்ற அந்த அரசாங்கத்தில் அதிமுகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார் என்று அமித் ஷாவே கிளீனா சொல்லிட்டாரே.”

“பிஜேபி, எடப்பாடி பழனிசாமி அவர்களை முதலமைச்சராக ஆக்கவில்லை என்றால் வேற யாரு அவங்களுடைய சாய்ஸா இருக்கும்னு நினைக்கிறீங்க?”
“அது அமித் ஷா முடிவெடுப்பாரு. அதெல்லாம் hidden agenda.”
“எடப்பாடி பழனிசாமி அவர்களின் பக்கம் தான் பிஜேபி நிற்கின்றது என்கிற போது, ஏன் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கிறதுக்கு தயங்குறாங்க?”
“அது தெரியலையே. இது அமித் ஷாஜீட்ட கேட்க வேண்டிய கேள்வி இது. என்கிட்ட கேட்டு எந்த பயனும் இல்ல.”
“இப்ப அதிமுக பாஜக கூட கூட்டணி வச்சதுக்கும் ஜெயலலிதா அவர்கள் இருக்கும் போது அதிமுக பாஜக கூட கூட்டணி வச்சதுக்கும் நிறைய வேறுபாடு இருக்கின்றிங்க. என்ன வேறுபாட நீங்க பாக்குறீங்க?”
“அம்மாவுடைய கட்டுப்பாட்டில் பிஜேபி இருந்தது. அம்மா 98ல அஞ்சு இடம் கொடுத்தாங்க பார்லிமென்ட் எலக்சன்ல. கலைஞர் கூட்டணி வைக்கும் போதும் அப்படித்தான். இப்ப எங்களுடைய கட்டுப்பாட்டில் பிஜேபி இல்லை. பிஜேபியுடைய கட்டுப்பாட்டில் எடப்பாடி இருக்கிறார்.”
“இப்ப எம்ஜிஆர் விசுவாசிகள் அதிமுகவில் இல்லன்னு சொன்னீங்க. இப்ப கே.சி பழனிசாமி போன்ற எம்ஜிஆர் ஆதரவாளர்கள் கூட நீங்க உள்ளுக்குள்ளே இருந்து ஃபைட் பண்ணி இருக்கணுமே தவிர எதிர்முகமான திமுகவில் இணைந்தது சரியான முடிவா என்று கேட்கின்றார்கள். அதற்கான உங்கள் பதில் என்ன?”
“நான் ஃபைட் பண்ணிட்டு தான் இருந்தேன் இவ்வளவு நாளா. உள்ள இருந்து தான் ஃபைட் பண்ணேன். ஃபைட் பண்ணதனாலதான் என்ன நீக்க வச்சாங்க.”
“நீங்க ஓபிஎஸ் ஆதரவாளராக செயல்பட்டீங்க என்ற ஒரு கருத்து இருந்ததே, அதை நீங்க எப்படி பார்க்கிறீங்க? ”
“நான் யாரு ஆதரவாளரும் இல்லைங்க. இவங்க எல்லாம் நான் வரும்போது இந்த கட்சியிலேயே இல்லைங்க. நான் உண்மைய பேசுறவன் அவ்வளவுதான்.”
“ஆரம்பத்திலேயே நீங்க பிஜேபி கூட்டணியில் தான் இருந்தீங்க. அப்போதிலிருந்தே நீங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருந்தீர்களா?”
“இப்பவும் சொல்றேன்.. பிஜேபி கூட்டணியை நான் எதிர்க்கல. பிஜேபி, ஒரு சின்ன கட்சி. பிஜேபி என்பது அதிமுக என்கின்ற பெரிய கட்சியின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.”

“நீங்க எல்லாம் உறுதுணையாக இருந்தா தானே பிஜேபியை அதிமுக கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். நீங்களே வெளிய வந்துட்டீங்களே?”
“நாங்க அதை தான் சொன்னோம். ஆனா, அவங்க கேட்கல. பிஜேபி பேச வேண்டிய சனாதனக் கொள்கையை எடப்பாடியே பேசுறாரே.”
“நீங்களா திமுகவை அப்ரோச் பண்ணீங்களா? இல்ல உங்கள திமுக அப்ரோச் பண்ணாங்களா?”
“படுத்துகிட்டு போத்தினா என்ன…? போத்திகிட்டு படுத்தா என்ன.. ? எல்லாம் ஒன்னுதான்.”
“ஓபிஎஸ் அவர்கள், விஜய் கூட கூட்டணி வைப்பார் என்கின்ற ஒரு பார்வையும் இருக்கு. அதை நீங்க எப்படி பாக்குறீங்க?”
“வரட்டும் பார்ப்போம். உங்கள மாதிரிதான் நானும் எதிர்பார்க்கிறேன். நல்ல இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் பாலிடிக்ஸ்.”
“உங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதரவு இருக்கா? அங்க உங்களுக்கான ஸ்பேஸ் எந்த அளவுக்கு இருக்கு?”
“நான் அப்படி எனக்கான ஸ்பேஸ் எதுவும் இருக்கின்றதுக்காக அரசியலுக்கு எந்த காலத்துலையும் வரலையே.”
“நீங்க வெளியே வந்த வந்த பிறகு, நாகேந்திர சேதுபதியை அதிமுகவில இணைச்சிருக்காங்க. அத நீங்க எப்படி பாக்குறீங்க?”
“நான் வரவேற்கிறேன். அவர் நல்ல பையன். அவர எந்த நோக்கத்துக்காக இணைச்சிருக்காங்கன்னு கொஞ்ச நாள்ல தெரிய வரும்.”