
உடுமலை: உடுமலை அருகே வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவசாயி உயிரிழந்தார். இந்நிலையில், அவர் அடித்துக் கொல்லப்பட்டாரா என்ற வகையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
உடுமலை அருகே மேல்குருமலை மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாரிமுத்து (58). அவர் உள்பட அந்த மலைகிராமத்தைச் சேர்ந்த 4 பேர் மீது ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் மாரிமுத்து கடந்த ஜூலை 29-ம் தேதி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, மூணாறு அருகே தங்கியிருக்கும் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்கச் சென்றுள்ளார் மாரிமுத்து.