• July 30, 2025
  • NewsEditor
  • 0

ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்துக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான், சீனா, கொலம்பியா, ஈக்குவேடார் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் சில இடங்களிலும் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளிலும் பேரலைகள் எழுந்துள்ளன. ரஷ்யாவில் 3-5 மீ உயர அலைகளும், ஹவாய் தீவில் 1.5 மீட்ட உயர அலைகளும் எழுந்துள்ளன. இதுபோலவே ஜப்பானின் ஹொக்கைடோ (Hokkaido) தீவில் 1.3 மீட்டர் உயர அலைகள் பதிவாகின, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மாகாணங்களில் 1 மீ வரை உயரமான அலைகள் பதிவாகியிருக்கின்றன.

ஜப்பானில் 30 ஜூலை புதன் கிழமை மாலை 7:30 (இந்திய நேரப்படி மாலை 4:16) பிரெஞ்சு பாலினீசியா தீவில் 4 மீ உயர அலைகள் எழலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறிது தூரத்திலேயே நிலநடுக்கமும் அறியப்பட்டுள்ளது. ஜப்பான் முக்ககிய நிலப்பரப்புக்கும் (மெயின் லாண்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் நாடு ஜப்பான். 2011 மிகப் பெரிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் கிடைத்த அனுபவமும் படிப்பினைகளும் இதற்கு முக்கிய காரணம்.

ஜப்பானில் எடுக்கப்பட்டுள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துக் காணலாம்.

கரை ஓரமாக வாழும் மக்கள் நீண்ட காலத் திட்டத்தின் படி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கம்சாட்கா தீபகற்பத்துக்கு 1500 கி.மீ தொலைவில் உள்ள ஜல்லானின் ஹொக்கைடோ பகுதியில் 1.5 மீட்டர் உயர அலைகள் எழுந்துள்ளன. எதிர்பார்த்ததை விட குறைந்த உயரத்தில் (1மீ அளவில்) அலைகள் வந்தாலும், இதுவரை பேரலைகளால் ஜப்பானில் ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இப்போது முன்னே இருக்கும் மிகப் பெரிய சவால் இயற்கைதான். சுனாமியின் இயல்பை யாரும் கணித்துவிட முடியாது. மிகப் பெரிய அலைகள் நீண்ட நேரத்துக்குப் பிறகும் வரலாம், ஒவ்வொரு பேரலையும் நீண்ட நேரத்துக்கு நிலைத்திருக்கும். மிகப் பெரிய அலை ஒரு நாள் வரைக் கூட நீடிக்கும். இதனால் நீண்ட நேர்த்துக்கு மக்கள் ஆயத்தமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே இன்றைய இரவு ஜப்பானில் திகில் நிறைந்ததாக இருக்கப்போகிறது.

tsunami

தகவல் பரிமாற்றம் விரைவானதாக இருக்க வேண்டும் என்றும், பொது மக்களுக்கு துல்லியமான தகவல்கள் கொடுக்கப்பட வேண்டுமென்றும் பிரதமர் ஷிகெரு இஷிபா உத்தரவிட்டுள்ளார்.

இன்று காலை 8:37க்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது ஜப்பான் வானிலை மையம். அடுத்த ஒரு மணிநேரத்தில் பிரதமர் அலுவலகத்தில் சுனாமியை எதிர்கொள்வதற்கான பணிக்குழு அமைக்கப்பட்டது.

நாடு முழுவதும் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் 20 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உரகாவா, ஹொக்கைடோ நகரங்களுக்கு ஐந்தாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் 10 ஆயிரத்துக்கும் மேலான மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

பல இடங்களில் 11 மணி அளவில் மக்கள் பெருமளவில் வெளியேறிவிட்டனர். அவசரகால பாதுகாப்பு யுத்திகள் மற்றும் சுனாமி அபாய வரைபடத்தின் அடிப்படையில் பெரும்பாலான பாதுகாப்பு முகாம்கள் கடற்கரையிலிருந்து 500மீ முதல் 2 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளன.

இதுவரை மூன்று நெடுஞ்சாலைகள் தடை செய்யப்பட்டன, மேலும் 41 ரயில் பாதைகளின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

Japan

இந்த செயல்பாடுகளின்போது சில விபத்துகளும் பதிவாகியிருக்கின்றன. தங்குமிடம் தேடிச் சென்ற 60 வயது முதிய பெண்மணி காலில் அடிபட்டு விழுந்துள்ளார். மற்றொரு நிகழ்வில் நிவாரண முகாமுக்கு காரில் சென்ற 50 வயது பெண்மணி செங்குத்தான பாறையிலிருந்து விழுந்து விபத்தில் மரணமடைந்துள்ளார்.

ஃபுகுஷிமாவில் உள்ள மிகப் பெரிய அணுமின் நிலையத்தில் தேவையான முன்னெச்சரிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊழியர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டதாகவும் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறு அறிவுப்பு வரும் வரை பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்கள் வீடு திரும்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஜப்பான் வானிலை மையம் உலகிலேயே மேம்பட்ட சுனாமி எச்சரிக்கை அமைப்பைக் கொண்டிருப்பதனால் நில நடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களுக்குள் பொது மக்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுவிடும். முகாம் இருக்கும் பகுதியைக் கூட தாக்குமளவு மிகப் பெரிய சுனாமி வருமானால் எப்படி, எங்கே (அருகிலிருக்கும் உயரமான மலைகள் மற்றும் கட்டடங்கள்) தப்பித்துச் செல்வது என்பது குறித்து மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *